500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது, கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில். "தேவர்மகன்' திரைப்படம் இங்கே எடுக்கப்பட்டது என்கிற தகவலோடு நம்மிடம் பேசிய கிணத்துக்கடவு கனகசபாபதி, கோதவாடி நடராஜன் ஆகியோர்....

Advertisment

sanskrit-in-kovil

""புரவிபாளையம் ஜமீன் நிர்வாகத்திடம் இருந்த இந்த சூலக்கல் கோவிலை இந்து அறநிலையத்துறை கேட்டதும் ஒப்படைத்தனர். வைகாசி மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா களை கட்டும். கேரளாவில் இருந்து மட்டும் ஆயிரக்கணக்கான ஆட்கள் வந்து குவிவார்கள் .

Advertisment

ஆரம்பத்திலிருந்தே சூலக்கல்லில் உள்ள பண்டாரம் எனச் சொல்லப்படுபவர்கள்தான் கோவில் பூசாரிகளாக இருந்து வருகிறார்கள். கோவிலில் அறங்காவலர் குழுத்தலைவர் பதவி காலியாக இருப்பதால் இங்கே செயல் அலுவலராயிருக்கும் சரவணபவன்தான் கோவில் நிர்வாகங்களை கவனிச்சுட்டு இருக்கறார். இந்நிலையில்... துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனோட சின்னம்மா மகன் மணிகண்டராஜு அன்னதானம் வழங்குவது என்ற பெயரில் அடிக்கடி கோவிலுக்கு வர ஆரம்பித்தார். கோவில் பூசாரிகளை அதிகாரம் பண்ண ஆரம்பித்தார். அவர்கள் எதிர்ப்புக் காட்டினர்.

மணிகண்டராஜு இதுபற்றி பொள்ளாச்சி ஜெயராமன்கிட்ட சொல்லிட்டாரு. ஜெயராமன் பூசாரிகளை தன் வீட்டுக்கே வரவச்சு.... "இனிமே அந்தக் கோவில்ல ஐயர்களைத்தான் வேலைக்குச் சேர்க்கிறதா இருக்கு. அதுக்குதான் என் தம்பி மணிகண்டராஜுவை, அந்தக் கோவிலுக்கு அனுப்பியிருக்கிறேன். என் தம்பிதான் அந்தக் கோவில்ல இனிமே எல்லாமே... சரியா..? எல்லோரும் போங்க...'ன்னு விரட்டியடிச்சுட்டாரு.

Advertisment

pollachi-jayaraman"பிரசித்தி பெற்ற மாரியம்மனை சமஸ்கிருதமயமாக்க விடாமல் எப்படியாவது காப்பாத்துவோமுங்க'' என்கிறார்கள் பூசாரிகள் உணர்ச்சியாய்.

இந்தச் சம்பவத்தில் தீவிரமாய் இறங்கி வேலை செய்யும் ஆதித் தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் வானுகன், ""இது எல்லா சமுதாயத்தினருக்குமான கோவில். ஆனால் இந்த நடைமுறை பிடிக்காமல் பிராமணர் கைகளுக்குள் இந்த மாரியம்மனை கொண்டுபோகப் பார்க்கிறார்கள். அப்படி யானால் மாரியம்மனை சாதி பார்க்கவும், பேசவும் வைப்பார்கள். அப்படி ஒரு இழிநிலை ஏற்பட நாங்கள் விட மாட்டோம்'' என்கிறார் கோபமாய்.

முதியவரான தேவியோ, ""சாமீ... இந்த மாரியம்மா சத்தியானவ. அவகிட்ட அரசியல்வாதிங்க மோதினா அவுங்களுக்குதான் பாதிப்பு'' என்கிறார் கோபத்தின் உச்சத்தில்.

இது குறித்து கேட்க பொள்ளாச்சி ஜெயராமனைத் தொடர்புகொண்ட போதெல்லாம் அவரது அலைபேசி எடுக்கப்படவில்லை. அவரது உதவியாளர் வீராசாமியைத் தொடர்புகொண்டோம். ""சார் அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. வேண்டாதவங்க இப்படியெல்லாம் கிளப்பி விட்ருக்காங்க'' என அவரும் அலைபேசியில் இருந்து விலகிக்கொண்டார்

மணிகண்டராஜுவை நாம் அவரது (98655-28955) செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டும் நாட் ரீச்சபிள் என்றே அது நமக்குச் சொன்னது.

செயல் அலுவலர் சரவணபவனை நேரில் பார்க்கச் சென்றபோது "அவர் வெளியே போய்விட்டார்' என நமக்கு பதில் வந்த நிலையில்... அவரது செல்போனில் தொடர்புகொண்டு கேட்டபோது... எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டவர், ""இப்போது பேச முடியாத நிலையில் வெளியே இருக்கிறேன் . உங்க லைனுக்கு வர்றேன்'' என தொடர்பை துண்டித்துக்கொண்டார். கட்டுரை எழுதப்படும் வரை வரவேயில்லை. (அவர்கள் தரப்பு வாதத்தை வெளியிட எந்நேரமும் தயாராய் இருக்கிறோம்)

சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நெடுங்காலமாய் தமிழ் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இனி அங்கே சமஸ்கிருதம் ஒலிக்க ஆள்வோர்கள் ஆசை கொள்கிறார்கள். துணை சபாநாயகரின் தூண்டுதலைத் தடுக்க பக்தர்கள் ஒன்றிணைகிறார்கள்.

-அருள்குமார்